ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த 3 டி20 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஜிம்பாப்வே ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. இந்த நிலையில் டி20 தொடரை வெல்ல இந்திய அணியும், வாழ்வா சாவா போட்டியில் ஜிம்பாப்வே அணியும் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் சுப்மன் கில் தான் டாஸை வென்றிருக்கிறார். இதன்பின் சுப்மன் கில் பேசுகையில், பவுலிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்ச்சில் நிச்சயம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்ற கருதுகிறேன். நாங்களும் டெத் பவுலிங்கில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை உள்ளது.

கடந்த போட்டியில் டெத் பவுலிங் திருப்திகரமாக இல்லை. இந்த போட்டியில் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதன் மூலமாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களும் இந்த டி20 தொடரில் விளையாடி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணி கேப்டன் ராசா பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்ய நினைத்திருந்தோம். இந்த பிட்ச் ஆட்டம் செல்ல செல்ல ஸ்லோவாகும். 2026 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து செயல்படுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விளையாட எங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.
3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே திட்டம். ஜிம்பாப்வே வீரர்கள் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார்கள். மசகட்ஷாவுக்கு பதிலாக அக்ரம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் பேட்டிங் செய்து இந்திய அணி டிஃபெண்ட் செய்து வென்றுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.