சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முக்கியப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலவச பயண சேவையை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான நுழைவுச் சீட்டில் உள்ள கியூ ஆர் குறியீட்டை, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்களில் ஸ்கேன் செய்து ரசிகர்கள் உள்ளே செல்லலாம். இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் ஓமந்தூரார் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்குச் செல்ல முடியும். அதேபோல போட்டி முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து திரும்பும் வகையில் ஒரு முறை இருவழிப் பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம். இந்தச் செலவை போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இரவில் போட்டி முடிந்து ரசிகர்கள் நெரிசலின்றி வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரயில் சேவையின் நேரமும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர் ஓமந்தூரார் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மார்க்கமாகவும், விமான நிலைய மார்க்கமாகவும் கடைசி ரயில்கள் புறப்படும்.
இரவு 11 மணிக்கு மேல் பச்சை வழித்தடத்திற்கு மாற வேண்டிய பயணிகள், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாற முடியும். வேறு நிலையங்களில் அதற்கான வசதி இருக்காது. மேலும், கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக அரசினர் ஓமந்தூரார் தோட்டம் மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில்கள் மூடப்படும். எனவே, ரசிகர்கள் ஆட்டம் முடிந்தவுடன் அதற்கேற்ப தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற முந்தைய சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. எனவே, நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான நிலையில் களமிறங்குகிறது.
ஒருவேளை இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். எனவே, இந்திய அணியின் வெற்றியை நேரில் காண சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
