சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் குறித்த புதிய தகவல் பரவி வருகிறது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அரையிறுதி கனவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
அதே சமயம், ஜிம்பாப்வே அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியதால், இந்திய அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, சற்று மெதுவான ஆடுகளமாகவே அறியப்படும். இந்த நிலையில், வியாழக்கிழமை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டிக்கு, முற்றிலும் புதிய பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 2026 டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்த பிட்ச்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவை எனவும் கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த புதிய பிட்ச் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே புதிதாக தயார் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக எந்தவொரு உள்ளூர் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதனால், பந்து பேட்டிற்கு மிக எளிதாக வரும் எனவும், இது பேட்டர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தால், இந்திய அணி அதிக ரன்களை குவித்து ரன் ரேட்டை உயர்த்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்தியா தனது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அதே நாளில் அகமதாபாத்தில் நடைபெறும் மற்றொரு குரூப் 1 சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்தப் போட்டியின் முடிவை பெரிதும் சார்ந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், இந்தியாவின் அரையிறுதிப் பாதை சற்று எளிதாகும்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான மீதமுள்ள போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால், 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளைப் பெறும். தென்னாப்பிரிக்க அணி தனது மூன்று சூப்பர் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இந்தியா எவ்வித சிக்கலுமின்றி தென்னாப்பிரிக்காவுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தால், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் முடிவாகும். தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதேபோல, அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்தால், இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். இங்கும் நிகர ரன் ரேட் அடிப்படையிலேயே முடிவு எட்டப்படும்.
ஒருவேளை தென்னாப்பிரிக்கா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடும். எனவே அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
