சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியின் இந்த முடிவையும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். இது குறித்துப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், வாஷிங்டன் சுந்தரை கைலாஷ் ஜீவன் என்ற ஆயுர்வேத மருந்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, தலைவலி, வயிற்றுவலி எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தை பயன்படுத்துவதைப் போல, இந்திய அணியில் என்ன பிரச்சனை என்றாலும் வாஷிங்டன் சுந்தரை தான் கம்பீர் களமிறக்குகிறார் என கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், "முன்பெல்லாம் கைலாஷ் ஜீவன் என்றொரு மருந்து இருக்கும். தலைவலி வந்தாலும் அதைத் தடவிக் கொள்வார்கள், வயிற்றுவலி வந்தாலும் அதையே சாப்பிடுவார்கள். அது அனைத்துப் பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வாக இருந்தது. தற்போது கவுதம் கம்பீருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது போல் தெரிகிறது. அது வாஷிங்டன் சுந்தர் தான். பேட்டிங்கில் பிரச்சனை என்றாலும் அவர்தான் பதில், பந்துவீச்சில் பிரச்சனை என்றாலும் அவர்தான் பதில்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "வாஷிங்டன் சுந்தரை பேட்டிங் வரிசையில் முன்கூட்டியே களமிறக்கியதால், ரிங்கு சிங் 6வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 7வது இடத்திலும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மிகவும் தவறான முடிவாகும்" என்றும் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தோல்வியால் இந்திய அணி தனது அடுத்த இரண்டு சூப்பர் 8 போட்டிகளிலும் அதாவது ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக ரன் குவிக்கத் தவறி வரும் பேட்டர்களை மாற்றிவிட்டு, அணியில் புதிய மாற்றங்களைச் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக உதவிப் பயிற்சியாளர்கள் ரியான் டென் டஸ்காட்டே மற்றும் சிதான்சு கோடக் ஆகியோர் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர். அபிஷேக் சர்மா 4 போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல் திலக் வர்மா 5 போட்டிகளில் 107 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மிகச்சிறந்த ஃபினிஷராக அணியில் சேர்க்கப்பட்ட ரிங்கு சிங், 29 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் உள்ளார்.
இது குறித்துப் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக், "அணியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தலைமைப் பயிற்சியாளரும் அணி நிர்வாகமும் கருதினால், நிச்சயமாக நாங்கள் அதைச் செய்வோம். தற்போதுள்ள ஆடும் லெவனைத் தொடரலாமா அல்லது புதிய மாற்றங்களைச் செய்யலாமா என்று சிந்திக்க வேண்டிய கட்டத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்" என்று கூறினார்.

அதேபோல் அணியில் மாற்று பேட்டர்கள் இல்லாதது கவலையளிக்கும் விஷயம் தான் என்று கூறியுள்ள ரியான் டென் டஸ்காட்டே, மோசமான ஃபார்மில் இருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
