சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முக்கியமான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் இது கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரிங்கு சிங்கிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்சர் படேலும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.
ஆனால், தனக்குக் கிடைத்த அந்த சிறப்பான தொடக்கத்தை அவர் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார். 15 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரில் பிளெஸ்ஸிங் முசரபானி வீசிய பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறான ஷாட் ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன் பெவிலியன் திரும்பியதும், அவரிடமும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் ஆகியோரிடமும் கம்பீர் மிகவும் கோபமாக விவாதிக்கும் காட்சிகள் வெளியாகின.
கம்பீர் என்ன பேசினார் என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதம் மற்றும் அவர் விளையாடிய அந்த குறிப்பிட்ட ஷாட் குறித்தே கம்பீர் தனது விமர்சனத்தை ஆவேசமாக முன்வைத்ததாகத் தெரிகிறது. நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறியதே கம்பீரின் இந்த கோபத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சனுக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு இதுவாகும். முன்னதாக டெல்லியில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் களமிறங்கிய சாம்சன், 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது ரிங்கு சிங் இல்லாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதையும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கடந்த சில தொடர்களாகவே அணியில் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கும் சஞ்சு சாம்சன், 2026ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 13.14 என்ற மோசமான சராசரியில் வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன் விரைவாக ஆட்டமிழந்தாலும், சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இந்தத் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 3வது வரிசையில் களமிறங்கிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50, திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தனர்.