சென்னை: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை பிரகாசமாக மாற்றி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது.
இதில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமல்லாமல் பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இது குறித்து பேசிய அவர், என்னுடைய செயல்பாடு நினைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. ஆனால் நான் விளையாடும் போது ஒவ்வொரு பந்திற்கும் ஏற்ற வகையிலும் போட்டியின் சூழலை நினைத்தும் தான் விளையாடினேன்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் நான் பந்தை வேகமாக அடிக்க முற்படுகின்றேன் என்று நான் நினைக்கின்றேன். இதனால் போட்டியில் நாம் சூழலுக்கு தகுந்த மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தேன். என்னால் எப்போதும் பந்தை அழகாக சிக்ஸருக்கு அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். எனவே நான் என்னுடைய விதத்தை தொடர வேண்டும் என்று நினைத்தேன்.
ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் என்னால் என்ன செய்ய முடியுமோ, அது என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே இன்று நான் பேட்டிங்கில் ரன்கள் எடுத்தது உண்மையிலே திருப்தி அளிக்கின்றது. இதே போல் இன்று மதியம் நடந்த தென்னாப்பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் போட்டியை கூட நாங்கள் பார்த்தோம்.
இந்த தொடரில் நல்ல கிரிக்கெட்டை நாம் எப்போதும் விளையாட வேண்டும். நமது திறமைகளை நம்பி விளையாட வேண்டும். சூழலுக்கு ஏற்பவும் நெருக்கடிகளை சமாளித்தும் விளையாட வேண்டும். எப்போதும் சிறந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். தற்போது போட்டி முடிவடைந்து விட்டால், உடனே அடுத்த போட்டி நோக்கி கவனத்தை திசை திருப்ப வேண்டும்.

நான் பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் இன்று நன்றாக பந்து வீசினேன் என்று நினைக்கின்றேன். கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கின்றேன். நான் பந்தை நன்றாக ஸ்விங் செய்கின்றேன். எனவே எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். என்னுடைய திறன் மூலம் நான் பந்துவீச்சில் விக்கெட்டுகளையும் எடுக்க முடியும். பேட்டர்களுக்கு சவால்களையும் ஏற்படுத்த முடியும். எனவே இது திருப்தி அளிக்கிறது. இன்னும் ஒரு ஓவர் எனக்கு தரப்படவில்லை அதையும் நோக்கி நான் செல்வேன் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.