மும்பை: அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த சின்ன குழந்தையின் கனவு நனவாகிவிட்டதாக இந்திய அணியின் இளம் வீரர் ரியான் பராக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியை அணிந்து கொண்டு பயணம் மேற்கொள்வதே உற்சாகமளிப்பதாக கூறியுள்ள ரியான் பராக், அறிமுக போட்டியில் விளையாடும் மைதானம் ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரியான் பராக்கும் ஒருவராக இருக்கிறார்.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ரியான் பராக், 573 ரன்களை விளாசி அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் நிறைவு செய்தார். இதனால் இந்திய அணிக்காக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயணத்தை தொடங்கினர். ஜிம்பாப்வேவில் இந்திய வீரர்கள் தரையிறங்கிய நிலையில், இந்திய வீரர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோயில் ரியான் பராக், இந்திய அணியில் அறிமுகமாகுவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த பின், மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்துவிட்டேன். குழந்தையாக இருக்கும் போதில் இருந்து இவ்வாறு இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியுடன் பயணிக்க வேண்டும் என்பது ஒரு கனவு. நாங்கள் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவோம். ஆனால் இந்திய அணியுடன் பயணிப்பதும், இந்திய ஜெர்சி அணிந்து பயணிப்பதும் வேறு மாதிரியான உணர்வை கொடுக்கிறது.
அசாம் மாநிலத்தில் பிறந்து சில ஆண்டுகளில் இருந்தே இந்த கனவு கண்டு வந்துள்ளேன். தற்போது கனவை எட்டிப்பிடித்துள்ளது மகிழ்ச்சி. ஜிம்பாப்வே மைதானத்திற்கு என்று எனது இதயத்தில் ஸ்பெஷலான இடம் நிச்சயம் இருக்கிறது. அந்த மைதானம் என்னை பொறுத்தவரை புனிதமானதாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.