ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் வென்றுள்ள நிலையில், ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் நடக்கவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கான தொடக்கமாக ஜிம்பாப்வே டி20 தொடர் அமைந்துள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் ஜொலிக்க போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முதல்முறையாக கேப்டன்சியை ஏற்றுள்ள சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுப்மன் கில் பேசுகையில், இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா தொடக்க வீரர்.. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியும் தொடக்க வீரர் தான்.. இதற்கு முன் நானும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி வந்திருக்கிறேன்.
அதனால் மீண்டும் டி20 போட்டிகளில் தொடக்கம் கொடுக்கவே விரும்புகிறேன். கேப்டனாக விளையாடும் போது கூடுதல் அழுத்தமும், எதிர்பார்ப்பும் இருக்கும். கேப்டனாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் எட்டிய உயரத்தை எட்டுவதே மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு வீரருக்கும் எங்கு இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கு இருக்கும். மற்றவர்கள் எட்டிய இலக்கை அடைய விரும்பினால், கூடுதல் அழுத்தம் தான் ஏற்படும்.
ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த போது வீரராக ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. என்னை பற்றியே அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது. தலைமைக்குரிய பார்வையையும் கற்றுக் கொண்டேன். ஆனால் ஒரு கேப்டனாக மிகப்பெரிய சவால் எதுவென்றால், அது மன உறுதி சார்ந்தது தான். ஒவ்வொரு வீரரையும் சரியாக தயார் செய்ய வேண்டும். டி20 உலகக்கோப்பை விளையாடிய இந்திய அணியுடன் ஒப்பிட்டால், இந்த அணி வித்தியாசமானது.
இந்த அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இருக்கின்றனர். இந்த டி20 தொடரில் இந்திய இளம் வீரர்கள் பலருக்கும் சர்வதேச கிரிக்கெட் அனுபவத்தை கொடுப்பது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக நினைக்க போவதில்லை. ஏனென்றால் கடந்த முறை இங்கு வந்தபோது ஒருநாள் தொடரில் விளையாடினோம். அதனால் நிச்சயம் சவால் நிறைந்த தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.