ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 116 ரன்கள் என்ற இலக்கை மட்டுமே துரத்திய இந்திய அணி, வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்று சாம்பியனானது. இந்த கொண்டாட்டமே இன்னும் முடிவடையாத சூழலில், இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது.

பின்னர் இந்திய அணிக்காக அறிமுக வீரர் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அறிமுக வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் - சுப்மன் கில் இருவரும் இணைந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சட்டாரா வீசிய 5வது ஓவரில் ரியான் பராக் 2 ரன்களிலும், ரிங்கு சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 5 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சுப்மன் கில் - துருவ் ஜுரெல் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை கையில் எடுத்தனர். 9 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 36 ரன்களாக மட்டுமே இருந்தது. இதன்பின் ரன்கள் சேர்க்க முயற்சித்து துருவ் ஜுரெல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சிக்கந்தர் ராசா சுழலில் சிக்கி சுப்மன் கில்லும் 31 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் சுக்குநூறாகியது.
இதனால் உற்சாகமடைந்த ஜிம்பாப்வே ரசிகர்கள் ஒவ்வொரு டாட் பாலுக்கும் கோஷம் எழுப்பி கொண்டாடினர். பின்னர் வந்த ரவி பிஷ்னாய் 9 ரன்களில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் - ஆவேஷ் கான் கூட்டணி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. வாஷிங்டன் சுந்தர் நிதானம் காட்டிய போது, ஆவேஷ் கான் அதிரடியில் இறங்கினார். மசகட்ஷா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஆவேஷ் கான், ஃபுல் டாஸ் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 16 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த முகேஷ் குமார் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அடுத்த 2 ஓவர்களில் 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 5வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.