ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்கள் கண்மூடி திறப்பதற்குள் ஜிம்பாப்வே பொறியில் சிக்கி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. கடைசி நேரத்தில் மடான்டே அதிரடியாக 4 பவுண்டரிகளை விளாசி கவுரவ இலக்கை எட்ட காரணமாக அமைந்தார்.

இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணிக்கு அறிமுக வீரர் அபிஷேக் சர்மா - கேப்டன் சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் முதல் ஓவரை பிரையன் பென்னட் முதல் ஓவரை வீசினார்.
முதல் 3 பந்துகளை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீசிய பென்னட், 4வது பந்தை லெந்தை மாற்றி உடலை நோக்கி வீசினார். இதனால் முதல் சிக்சரை அடிக்கும் ஆசையில் அபிஷேக் சர்மா பந்தை தூக்கியடிக்க, அது நேராக மசகட்ஷா கைகளில் சென்று விழுந்தது. இதனால் அறிமுகப் போட்டியிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இணைந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்த நல்ல நிலையில் இருந்த போது, முசாரபாணி வீசிய ஸ்விங்கை அடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை பேட்டை வீசினார். அது நேராக ஸ்லிப் திசையில் நின்ற கையா கைகளில் சென்றது. இதனால் ருதுராஜ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் ரியான் பராக் சட்டாரா பவுலிங்கில் 2 ரன்களிலும், ரிங்கு சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
கண்மூடி திறப்பதற்குள் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே சொதப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணியை விளாசி வருகின்றனர்.