ஹராரே: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 183 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 55 ரன்களை குவித்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் முசராபணி 4 ஓவர்களில் வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ரன்களை கட்டுப்படுத்தினார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பென்னட் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாச, 2வது ஓவரில் சுப்மன் கில்லும் 2 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார். பவர் பிளேவின் ஒவ்வொரு ஓவரிலும் கட்டாயம் 2 பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் இருவரும் இருந்தனர்.

இதனால் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட, பேட்ஸ்மேன்கள் இருவரும் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர். இதனால் அவசரப்பட்ட ஜெய்ஸ்வால், ராசாவை அட்டாக் செய்ய முயன்று 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த அபிஷேக் சர்மா 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 81 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் சுப்மன் கில் - ருதுராஜ் கூட்டணி இணைந்து அட்டாக்கை தொடர்ந்தனர்.
மாதேவரா வீசிய 13வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசினர். தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் சுப்மன் கில் அனைவரையும் அட்டாக் செய்ய முயல, இன்னொரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் ஃபீல்டிங்கை பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி அசத்தினார். சிக்கந்தர் ராசா வீசிய 17வது ஓவரில் மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் 2 சிக்சர்கள் உட்பட 18 ரன்களை விளாசினார்.
இதனிடையே முசராபணி பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களாக இருந்தது. இதனால் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட் கைகளுக்கு வந்தது. இந்த நிலையில் 19வது ஓவரில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்கள் விளாசப்பட, கடைசி ஓவரில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் ருதுராஜ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது.