ஹராரே: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 235 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 160 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க, சுப்மன் கில் 2வது ஓவரில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின் அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இணைந்தது. இருவரும் பவர் பிளே ஓவர்கள் வரை நிதானம் காட்டிய நிலையில், அதன்பின் பவுண்டரிகளை அடிக்க தொடங்கினர். இதன் காரணமாக 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்திருந்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் அரைசதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
மேயர்ஸ் வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களை அபிஷேக் சர்மா விளாசினார். இதன் மூலமாக 33 பந்துகளில் அரைசதம் அடிக்க, சிக்கந்தர் ராசா வீசிய 13வது ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. அப்போது அபிஷேக் சர்மா 82 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மசகட்ஷா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார்.
இதன்பின் அடுத்த பந்திலேயே அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, பின்னர் ரிங்கு சிங் களம் புகுந்தார். இதன்பின் ஆட்டத்தின் போக்கை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்து கொண்டார். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 38 பந்துகளில் அரைசதத்தை எட்ட, சட்டாரா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 197 ரன்களாக இருந்தது.
இதன்பின் 19வது ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸ் உட்பட 16 ரன்களை விளாச, கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் விளாசினர். கடைசி 10 ஓவர்களில் 160 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.