சென்னை: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்த இது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு அதிரடி சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 24 ரன்கள் குவித்து, சிறப்பான துவக்கத்தை அளித்தார். எனினும், அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தொடர் முழுவதும் தடுமாறிய அபிஷேக் ஷர்மா, இந்தப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் விளாசினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய இசான் கிஷன், மூன்றாவது வீரராக களமிறங்கி 24 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் சூர்யகுமார், 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் விரைவாக 33 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற வலுவான, சவாலான இலக்கை நிர்ணயம் செய்தது.
ஹர்திக் பாண்டியா வெறும் 23 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். வெற்றிக்கு 257 ரன்கள் என்ற மிக உயர்ந்த, சவாலான இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அவர்களின் தொடக்க வீரர் மருமாணி 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டிக்கான் மயர் 6 ரன்களுடன் வெளியேறினார்.
இந்த சமயத்தில், மற்றொரு தொடக்க வீரரான பென்னட், சிக்கந்தர் ராஜாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி இந்த ஜோடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. சிக்கந்தர் ராஜா 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும், பென்னட் தனது அதிரடியை விடாமல் தொடர, அவர் 34 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

வெற்றிக்குத் தேவையான ரன்கள் இலக்கு மிகவும் அதிகமாக இருந்ததால், ஜிம்பாப்வே அணிக்கு மீள முடியாத நிலை ஏற்பட்டது. ரன்கள் வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அடித்து ஆடினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற பென்னட் 59 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார், இதில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது,