ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் ஜிம்பாபவே அணி தரப்பில் மருமாணி - மாதேவேரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரிலேயே மாதேவேரா 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 3வது ஓவரில் கலீல் அஹ்மத் பவுலிங்கில் மருமாணி 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த பென்னட் 4 ரன்களிலும், அதிரடியாக ஆடிய கேப்டன் ராசா 15 ரன்களிலும், கேம்பெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 7 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் மையர்ஸ் - மடாண்டே கூட்டணி இணைந்தது.
இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அபிஷேக் சர்மாவை மட்டும் குறி வைத்து அட்டாக் செய்தனர். சரியாக பார்ட் டைம் பவுலர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சிவம் துபே இருவரும் அட்டாக்கில் வந்த போது, கியரை அதிரடிக்கு மாற்றினார். சிவம் துபே வீசிய 13வது ஓவரில் 11 ரன்களும், 15வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 16 ரன்களும் விளாசப்பட்டது. இதனால் 15 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 110 ரன்களை குவித்தது.
ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் கைகள் ஓங்குவதை உணர்ந்த சுப்மன் கில், உடனடியாக வாஷிங்டன் சுந்தரை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 17வது ஓவரில் மடாண்டே 37 ரன்கள் எடுத்து வெளியேற, ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 64 ரன்கள் தேவையாக இருந்தது. ஆவேஷ் வீசிய 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ரவி பிஷ்னாய் வீசிய 19வது ஓவரில் சிக்சர் அடித்து மையர்ஸ் அரைசதத்தை எட்டினார்.
இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட, இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 42 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வீச ஆவேஷ் கான் வந்தார். இதில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.