ஹராரே: இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கவுதம் கம்பீரின் ஸ்டைல் குறித்து இளம் வீரர் ஆவேஷ் கான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். தோனியை போலவே அதிகம் பேசாத கவுதம் கம்பீர், அணிக்கும் வீரர்களுக்கும் தேவையான கருத்தினை சரியான நேரத்தில் செயல்பாடுகள் மூலமாக புரிய வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ வரலாற்றில் இதுவரை பயிற்சியாளர்களுக்கு யார் யார் விண்ணப்பித்தார்கள் என்ற விவரங்கள் கூட வெளியிடப்படாமல், ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். ராகுல் டிராவிட் நியமனத்தின் போது கூட, அவர் யு19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

ஆனால் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து முழுக்கு போட்டு, நேரடியாக கேகேஆர் அணியின் ஆலோசகராக வந்து கோப்பையை மட்டுமே வென்று கொடுத்துள்ளார். இதன்பின் உடனடியாக பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஏற்கனவே விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுடன் கம்பீர் மோதலில் ஈடுபட்ட சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
இதனால் இந்திய அணி வீரர்களை எப்படி கவுதம் கம்பீர் அணுகுவார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த போது, ஆவேஷ் கான் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்து ஆவேஷ் கான் பேசுகையில், அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் எப்போதும் முன்னேறும் மனநிலையில் இருப்பது தான்.
ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டிக்கும் தனது திறமையை முன்னேற்ற வேண்டும். எதிரணியை வீழ்த்துவதோடு, நாமும் 100 சதவிகிதம் உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார். அணி மீட்டிங்கில் கூட கவுதம் கம்பீர் பெரிதாக பேச மாட்டார். அதேபோல் தனிப்பட்ட முறையிலும் வீரர்களுடன் ஆலோசிக்க மாட்டார்.
ஆனால் அவரின் கருத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் பல்வேறு செயல்கள் மூலமாக வீரர்களுக்கு புரிய வைத்துவிடுவார். அதேபோல் சில நேரங்களில் வீரர்களுக்கு சில டாஸ்க்-களும், ரோல்களையும் அளிப்பார். எப்போது ஒரு அணியின் வெற்றிக்காக மட்டுமே சிந்திக்கும் பயிற்சியாளராக இருப்பார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வீரர்களின் மனஉறுதியை கம்பீரால் எளிதாக அதிகரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.