சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு பல சாதனைகளைப் படைத்தாலும், பந்துவீச்சில் எதிரணியைக் கட்டுப்படுத்தத் தவறியதால் மிக முக்கியமான நெட் ரன் ரேட் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அபிஷேக் சர்மா 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். திலக் வர்மா 44 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.
இந்த மாபெரும் இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பிரையன் பென்னட் தனி ஆளாகப் போராடி 97 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், புள்ளிப்பட்டியலின் கணக்கீட்டு அடிப்படையில் இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 புள்ளிகளுடன் +1.791 என்ற நெட் ரன் ரேட்டைப் பெற்றிருந்தது. இந்திய அணியோ -3.800 என்ற மோசமான நிலையில் இருந்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட்டை இந்திய அணி முந்த வேண்டும் என்றால், குறைந்தது 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அதாவது, 257 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணியை 148 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால், ஜிம்பாப்வே அணி 184 ரன்கள் வரை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதித்துவிட்டனர். இதன் விளைவாக, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் நெட் ரன் ரேட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பின்னுக்குத் தள்ள முடியாமல் போனது. குறிப்பாக சிவம் துபே மட்டுமே 2 ஓவர்களில் 46 ரன்களை வாரி இறைத்து இருந்தார்.
உலகக்கோப்பையை நடத்துறோம்.. பெரும் அவமானம்.. இலங்கை கேப்டனை நீக்க முடிவு.. கிரிக்கெட் வாரியம் அதிரடி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட்டை முந்தாததால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. இதனால் இந்திய அணிக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது. இந்திய அணி தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்தாகி, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டால், இரு அணிகளும் 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.
அப்போது எந்த அணியின் நெட் ரன் ரேட் அதிகமாக உள்ளதோ அந்த அணியே அரையிறுதிக்கு முன்னேறும். அந்தச் சூழலில் +1.791 என்ற ரன் ரேட்டில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக அரையிறுதிக்குச் சென்றுவிடும். -0.100 என்ற நிலையில் உள்ள இந்திய அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

ஜிம்பாப்வே அணியை 148 ரன்களுக்குள் சுருட்டி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால், மழை வந்தாலும் இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குச் சென்றிருக்கும். ஆனால் அந்த அரிய வாய்ப்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது தவறவிட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்தவிதத் தடையுமின்றி முழுமையாக வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
