சென்னை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி கடுமையாகப் போராடி வருகிறது. இந்த நிலையில், நிகர ரன் ரேட் குறித்து அதிகம் கவலைப்படாமல், முதலில் போட்டிகளில் வெற்றி பெறுவதில் இந்திய அணி முழு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார்.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இதனால் நடப்பு சாம்பியனான இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.
இனி வரும் போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்துவதோடு மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்க அணி தனது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையிலும் இந்தியா உள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தால், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் முடிவாகும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் +5.350 ஆகவும், தென்னாப்பிரிக்க அணியின் ரன் ரேட் +3.8 ஆகவும் உள்ளது. இந்திய அணியோ மைனஸில் உள்ளதால், ரன் ரேட் அடிப்படையில் அந்த அணிகளை முந்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இது குறித்து இர்ஃபான் பதான் பேசுகையில், "போட்டியின் தொடக்கத்திலேயே நிகர ரன் ரேட்டை உயர்த்துவது பற்றி இந்திய அணி சிந்திக்கக் கூடாது. போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே முதல் நோக்கமாக இருக்க வேண்டும். நன்றாக விளையாடி வெற்றியை உறுதி செய்த பின்னரே ரன் ரேட் பற்றி யோசிக்க வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் அல்லது தென்னாப்பிரிக்க அணியின் ரன் ரேட்டைத் தொடுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. அதற்கு 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இது எளிதான காரியமல்ல. எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் முதலில் வெற்றி பெறுவதில் மட்டுமே இந்திய அணி முழு கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
இந்திய அணியின் முன்வரிசை பேட்டிங்கில் இடதுகை பேட்டர்களே அதிகம் உள்ளனர். அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாடி வருகின்றனர். இதில் இஷான் கிஷன் ஓரளவுக்கு ரன் சேர்த்தாலும், அபிஷேக் சர்மா 4 இன்னிங்ஸ்களில் 3 முறை டக் அவுட் ஆகி 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் உள்ளது. திலக் வர்மா 5 இன்னிங்ஸ்களில் 107 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 118 என்ற அளவிலேயே உள்ளது. இது டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற அதிரடியான ஆட்டமாக இல்லை.

இதனைச் சுட்டிக்காட்டிய இர்ஃபான் பதான், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். "அணியில் மூன்று இடதுகை பேட்டர்கள் தொடர்ந்து களமிறங்குவதைத் தவிர்க்க சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். கடந்த போட்டிகளில் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததால், சூர்யகுமார் யாதவை முன்கூட்டியே களமிறக்க அணி நிர்வாகம் தயங்குகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
நடுப்பகுதி ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி ரன் குவிக்கக் கூடியவர். புதிய பந்தில் அவருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு ஆட்டமிழந்தால் அது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், பேட்டிங் வரிசையில் ஒரு சமநிலையைக் கொண்டு வர சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் களமிறங்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்" என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இன்று தனது வாழ்வா சாவா போட்டியில் ஜிம்பாப்வே அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.