ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் முதல் பந்திலேயே இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் சிக்சர் விளாசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணியின் ஸ்கோர் 13 ரன்களாக உயர்ந்தது பலரையும் மிரள வைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக ஜிம்பாப்வே டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். புயல் காரணமாக முதல் 2 டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வாலால் பங்கேற்க முடியவில்லை.

இதன்பின் 3வது டி20 போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால், தனது முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் என்றால் யார் தெரியுமா என்று புரிய வைக்கும் வகையில் தரமான இன்னிங்ஸை ஆடினார். 53 பந்துகளில் 2 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
சுப்மன் கில்லின் சுயநலமான இன்னிங்ஸ் காரணமாக சதம் விளாச முடியவில்லை. இந்த நிலையில் 5வது டி20 போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால், நேற்று எங்கு விட்டாரோ, அதே இடத்தில் இருந்து தொடங்கினார். டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங் செய்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல், முதல் ஓவரை வீசுவதற்கும் வந்தார்.
முதல் பந்தை ஃபுல் டாஸாக வீச, ஜெய்ஸ்வால் முட்டிப்போட்டு கொண்டு அபாரமாக சிக்சரை விளாசினார். டி20 போட்டியின் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கும் 4வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இவருக்கு முன்பாக சேவாக், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிக்சர் அடித்துள்ளனர்.
பின்னர் அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட, ஃபிரீ ஹிட் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் முதல் பந்தை வீச, அந்த பந்தும் சிக்சருக்கு பறந்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஒரே பந்தில் 13 ரன்களாக உயர்ந்தது. ஆனால் ராசா வீசிய 5வது பந்தில் ஜெய்ஸ்வால் போல்டாகி 12 ரன்களுடன் வெளியேறினார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி தரமான கம்பேக்கை கொடுத்தது.