ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார்.
இதன்பின் ஜிம்பாப்வே அணி தரப்பில் வெஸ்லி - மருமாணி கூட்டம் தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீச கலீல் அஹ்மத் அழைக்கப்பட்டார். ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் இருவரும் எந்த அவசரமும் காட்டாமல், நிதானமாக ரன்கள் சேர்த்தனர். முதல் ஓவரில் 4 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் விளாசப்பட்டது.

பின்னர் 3வது ஓவரை வீசுவதற்காக மீண்டும் கலீல் அஹ்மத் வந்தார். முதல் 2 பந்துகளில் ரன்கள் சேர்க்கப்படாத நிலையில், 3வது பந்து மருமாணியின் காலில் பட்டு பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜெய்ஸ்வால் கைகளுக்கு சென்றது. பந்து நிதானமாக சென்றதால், வெஸ்லி - மருமாணி இருவரும் ஒரு ரன் எடுத்தனர். அதனை தடுக்க முயன்ற ஜெய்ஸ்வால், வெஸ்லி வந்த முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கி த்ரோ எறிந்தார்.
அது ஸ்டம்பை மிஸ் செய்ய, பந்து நேராக பவுண்டரி எல்லையை நோக்கி சென்றது. பந்தை கவர் செய்ய எந்த ஃபீல்டரும் இல்லாததை கூட பார்க்காமல் ஜெய்ஸ்வால் த்ரோ எறிந்தது தெரிய வந்தது. இதனால் மொத்த கேமராவும் ஜெய்ஸ்வால் பக்கம் திரும்பியது. இதனை எதிர்பார்க்காத வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் வெளிப்படையாக கோபத்தை வெளிக் காட்டினார்.
இதன்பின் ஏமாற்றத்தை கட்டுப்படுத்தி கொண்டு கலீல் அஹ்மத் பவுலிங் செய்ய திரும்பினார். ஏற்கனவே ஜெய்ஸ்வால் ஏராளமான முறை ஓவர் த்ரோ செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஜெய்ஸ்வால் ஃபீல்டிங் செய்யும் போது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த ஓவர் த்ரோ காரணமாக கலீல் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் மட்டும் 10 ரன்கள் விளாசப்பட்டது. பேட்டிங், பவுலிங்கில் தவறுகள் நடக்கும் போது இளம் வீரர்கள் என்று விமர்சனத்தை தவிர்த்தாலும், ஃபீல்டிங்கில் தவறு செய்வது முதிர்ச்சியின்மையை வெளிப்படையாக படம் போட்டு காட்டுவது போல் அமைகிறது.