இவர் எல்லாம் இந்திய அணியில் விளையாட போகிறாரா? அவ்வளவு ஈஸி ஆயிடுச்சா? ஸ்ரீகாந்த் சாடல்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுத் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வேகப்பந்து வீச்சாளர்களான யாஷ் தாக்கூர் மற்றும் அசோக் சர்மா ஆகியோரை அணியில் சேர்த்திருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாஷ் தாக்கூர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி, கிட்டத்தட்ட 13 என்ற மோசமான எகானமி ரேட்டில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இந்த ஆண்டு அறிமுகமான அசோக் சர்மா, விளையாடிய 6 போட்டிகளில் 10.85 என்ற எகானமி மற்றும் 38 சராசரியுடன் 6 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்திய அணித் தேர்வு குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "யாஷ் தாக்கூர் போன்ற ஒருவர் இந்திய அணிக்காக விளையாடப் போகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அசோக் சர்மாவின் நிலைமையும் இதுதான். இப்போதெல்லாம் இந்திய அணிக்காக விளையாடுவது மிகவும் எளிதாகிவிட்டது, இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. மயங்க் யாதவ் அல்லது பிரின்ஸ் யாதவ் போன்றவர்கள் தான் இந்த அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால், பந்துவீச்சு எவ்வளவு சாதாரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் யாதவ், ஐபிஎல் 2026 சீசனில் விக்கெட் ஏதுமின்றி தடுமாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக தடுமாறி வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டதையும் ஸ்ரீகாந்த் கடுமையாக விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரில் வெறும் ஒரு போட்டியில் விளையாடிய பிஷ்னோய், 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.
இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "அணியில் மீண்டும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார். உங்களிடம் வேறு எந்த சுழற்பந்து வீச்சாளரும் இல்லையா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஷிவாங் குமாரை தேர்வு செய்திருக்கலாம். தொடர்ந்து பிஷ்னோய்க்கு வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தால், ஏதோ ஒரு போட்டியில் அவர் நன்றாகச் செயல்படுவார். அதன் பிறகு, அவரையும் துபேயையும் ஏதோ மிகச் சிறந்த திறமைசாலி போன்று விளம்பரப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்" என்றார்.
"திறமையின் அடிப்படையில் மட்டுமே வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். யாஷ் தாக்கூரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு தகுதியானதா? முதல்தர போட்டிகளில் அவரது சாதனை நன்றாக இருக்கலாம், ஆனால் டி20 தேர்வு என்பது ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். சையத் முஷ்டாக் அலி தொடரின் செயல்பாடு ஐபிஎல் தேர்வுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும், ஐபிஎல் செயல்பாடு இந்திய அணி தேர்வுக்கான வழியாக இருக்க வேண்டும்.
அப்படித்தான் நிதிஷ் குமார் ரெட்டி ஐபிஎல் செயல்பாடுகள் மூலம் இந்திய அணியில் கவனத்தை ஈர்த்தார். ஆனால் அசோக் சர்மா குஜராத் அணிக்காக சுமாராக மட்டுமே விளையாடி உள்ளார், நேரடியாக இந்திய தொப்பியைப் பெறும் அளவுக்கு எந்தவொரு சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை" என்று கூறினார். ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications

