IND vs ZIM: அபிஷேக் சர்மா 3 விக்கெட் எடுத்தாரு? அப்புறம் இந்த வீரர் இந்திய அணியில எதுக்கு?
மும்பை: ஜிம்பாப்வே, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, அறிமுக வீரர் யாஷ் தாகூர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் முன்வைத்துள்ளார். இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "யாஷ் தாகூர் சர்வதேச அளவிலான பந்துவீச்சாளர் கிடையாது. அபிஷேக் சர்மாவும் இங்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நீங்கள் அவரை மிக விரைவாக இந்திய அணிக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள். அவர் உண்மையிலேயே இந்திய அணிக்கு விளையாட தகுதியானவரா? வாய்ப்பே இல்லை. இங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். அசோக் சர்மாவை அறிமுகப்படுத்திய பிறகு அவரை ஏன் நீக்கினீர்கள்?"

"அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டு, பின்னர் நீக்கியுள்ளீர்கள். நீங்கள் இங்கே அனைத்தையும் குழப்பி, அணியின் கட்டமைப்பைக் கெடுக்கிறீர்கள். நீங்கள் தவறான வீரர்களை ஆதரிக்கத் தொடங்குகிறீர்கள். அசோக் சர்மாவை வளர்த்தெடுக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், அதே முடிவில் உறுதியாக இருங்கள். யாஷ் சர்வதேச அளவிலான வீரர் அல்ல. அவர் விளையாடும் ஐபிஎல் அணியில் கூட அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை."
"ஆனால் அசோக் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி சிறப்பாக பந்துவீசினார். எந்த அடிப்படையில் நீங்கள் வீரர்களை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் நீக்குகிறீர்கள்?" என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த போட்டியில் யாஷ் தாகூர் நான்கு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமானி ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
குறிப்பாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் இவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "பகுதி நேர பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். துபே மற்றும் பந்துவீசிய மற்ற வீரர்களைப் போல, அவர்கள் எவ்வளவு அதிகமாக பந்துவீசுகிறார்களோ, அது இந்திய அணிக்கு அவ்வளவு நல்லது. இது எந்தவொரு போட்டியிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அபிஷேக் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் ஒரு சிறந்த அறிகுறியாகும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
இரண்டாவது டி20 போட்டியில், அபிஷேக் சர்மா 2.5 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபே 1.4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், திலக் வர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
"அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்குப் பிறகு, இது இந்திய அணிக்கு ஒரு நல்ல கம்பேக் ஆகும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த கம்பேக் முற்றிலும் அவசியமானது. வெற்றி பெறுவது முக்கியம். ஆனால் இந்த ஜிம்பாப்வே பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. அவர்களிடம் மூன்று அல்லது நான்கு நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர், ஆனால் பேட்டிங்கில் எந்த திட்டமும் இல்லை," என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications

