ஹராரே: டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்த இந்திய வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகிய 3 வீரர்கள் ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். டி20 உலகக்கோப்பை ஃபைனலுக்கு பின் பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக சிவம் துபே, சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரால் திட்டமிட்டபடி புறப்பட முடியவில்லை.
இதன் காரணமாக சாய் சுதர்சன், ஹர்திக் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய மூவரும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியுடன் நாடு திரும்பிய மூவரும், நேற்று முன்தினம் ஜிம்பாப்வே புறப்பட்டனர். நேற்று மாலை இந்திய அணியுடன் இணைந்த நிலையில், இன்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். 2வது டி20 போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாசிய நிலையில், நம்பர் 3ல் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், நம்பர் 4ல் வந்த ரிங்கு சிங் 48 ரன்களும் விளாசினர்.
இதனால் சீனியர் வீரர்களான ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2வது போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா சதம் விளாசி இருப்பதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கேள்விக்குறி தான்.
ஏற்கனவே அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் கேம்டைம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய சிவம் துபேவை பெஞ்ச் செய்வது கடினமான விஷயமாகும்.
இதனால் யாரை நீக்கிவிட்டு சிவம் துபேவை இந்திய அணி நிர்வாகம் களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் இருவருக்கும் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.