குறைந்தது 10 போட்டியாவது வாய்ப்பு கொடுங்க.. பாதுகாப்பற்ற சூழலை உருவாக்காதீங்க.. கையிப் அறிவுரை
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக, சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயிடம் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியையும், பாதுகாப்பான சூழலையும் வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 25 வயதான பிஷ்னோய், காயம் அடைந்த வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பிஷ்னோய் 4 ஓவர்களில் 60 ரன்களை வாரிக்கொடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த போட்டியில் மூன்று நோ-பால்களை வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றியதால், அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்பே, ரவி பிஷ்னோய் தனது ஃபார்மை மீட்க போராடி வந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடிய அவர், 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், ராஜஸ்தான் அணி அவருக்கு பதிலாக இளம் வீரர் யாஷ் ராஜ் புஞ்சாவிற்கு முன்னுரிமை அளித்தது. இந்த நிலையில், பிஷ்னோயின் மன உறுதியை மேம்படுத்துவதும், அணியில் அவருக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதும் ஸ்ரேயாஸ் ஐயரின் கடமை என்று முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
"இங்கிலாந்தில் ஒரே ஒரு போட்டியில் விளையாடிய பிஷ்னோய், உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஐயர், பிஷ்னோயை எவ்வாறு கையாள்கிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். 'சகோதரா, நீ எப்படி விளையாடினாலும் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் உனக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என்று அவரிடம் சொல்ல வேண்டும்.
குறைந்தது அவருக்கு ஒரு வாய்ப்பையாவது கொடுங்கள். ஒரே ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அவரை நீக்கினால், அணியில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அணிக்குள் வரும் ஒரு வீரர் இதைப் பார்க்கும்போது, ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால் தானும் நீக்கப்படுவோம் என்று நினைக்கக்கூடும். எந்தவித அழுத்தமும் இன்றி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால், டி20 கிரிக்கெட்டில் நாம் பின்தங்கிவிடுவோம். எனவே, பிஷ்னோயிற்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்ற உறுதியை அளித்து, அவரை சுதந்திரமாக பந்துவீச அனுமதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றும் கைஃப் தெரிவித்தார்.
வருண் சக்கரவர்த்தியின் காயம் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் இல்லாத நிலையில், தற்போதைய இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் மட்டுமே உள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபேயும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications

