சென்னை: இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பேட்டிங் திறமைகள் பற்றி தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பந்தை சுற்றும் ஒரு வீரர் (Slogger) என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மா ஒரு முழுமையான பேட்ஸ்மேன் கிடையாது என்றும், அவர் சும்மா பந்தை சுற்றும் ஒரு வீரர் மட்டுமே என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினார். இந்த போட்டிக்குப் பிறகு தனது யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், அமீரின் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அஸ்வின் பேசுகையில், "அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு சாதாரண அடிதடி வீரர் கிடையாது. கிரிக்கெட் உலகிலேயே மிகச்சிறந்த மட்டை சுழற்றும் லாவகம் (Bat swing) கொண்ட வீரர்களில் அவரும் ஒருவர். சொல்லப்போனால் அவரது குருவான யுவராஜ் சிங்கை விடவும் சிறந்த பேட் ஸ்விங் இவரிடம் உள்ளது என்றே நான் சொல்வேன்" என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் பேசிய அவர், "அபிஷேக் சர்மா பந்தை அடிக்கும்போது அது மிக நீண்ட தூரம் செல்கிறது. இதைப் பார்த்துவிட்டு மக்கள் அவரைத் தவறாகக் கணிக்கிறார்கள். அவரிடம் உள்ள ஒரே குறை என்னவென்றால், ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டும் என்ற முனைப்பை காட்டுவதுதான். மற்றபடி அவரிடம் டெக்னிகல் ரீதியாக எந்தக் குறையும் இல்லை" என்று விளக்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு ஆலோசனை
அடுத்ததாக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் அபிஷேக் சர்மா எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும் அஸ்வின் ஆலோசனை வழங்கினார்.
"அபிஷேக் சர்மா தனது ஷாட்களில் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தத் தேவையில்லை. பந்தை சரியான டைமிங்கில் அடித்தாலே போதுமானது. யாராவது அவருக்கு ஆலோசனை கூறினால், பந்தை சரியான நேரத்தில் கணித்து ஆடுவதன் முக்கியத்துவத்தை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்" என்று அஸ்வின் கேட்டுக்கொண்டார்.

முகமது அமீரின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரும் அஸ்வினைப் போலவே, அபிஷேக் சர்மா வெறும் பேட்டை சுற்றும் வீரர் மட்டுமல்ல, சிறந்த பேட்டிங் டெக்னிக் கொண்ட வீரர் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
