ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
3வது டி20 போட்டி நாளை மறுநாள் ஹராரே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான இரு அணிகளின் வீரர்களும் தயாராகி வரும் சூழலில், இந்திய அணியுடன் சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர். இதனால் சாய் சுதர்சன், ஹர்சித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய 3 வீரர்களும் அடுத்த 3 போட்டிக்கான அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3 சீனியர் வீரர்கள் இந்திய அணியுடன் இணைந்துள்ளதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனை மீண்டும் கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அபிஷேக் சர்மா 2வது டி20 போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார்.
இதனால் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் விக்கெட் கீப்பராக உள்ள துருவ் ஜுரெல் இடத்தில் சஞ்சு சாம்சனும், ரியான் பராக் இடத்தில் சிவம் துபேவும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் முதல் டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்பில் ரியான் பராக் 2 ரன்களையும், துருவ் ஜுரெல் 6 ரன்களையும் மட்டுமே சேர்த்தனர். 2வது போட்டியில் இருவருக்குமே பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் சாய் சுதர்சன் நீக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் பொறுப்பு பயிற்சியாளராக சென்றுள்ள விவிஎஸ் லக்ஷ்மண் இளம் வீரர்களிடம் எப்படியான அணுகுமுறையை பயன்படுத்தி பிளேயிங் லெவனை கட்டமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த டி20 தொடரின் செயல்பாடுகளை வைத்தே இலங்கை சுற்றுப்பயணத்திற்கு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், வீரர்களுக்கும் இது அக்னிபரீட்சையாக அமைந்துள்ளது.