ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக 3 இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, டெஸ்ட் தொடரில் அசத்திய துருவ் ஜுரெல் மற்றும் ராஜஸ்தான் அணிக்காக மிரட்டிய ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.
22 வயதாகும் ரியான் பராக் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணிக்காக அசாம் மாநிலத்தில் இருந்து அறிமுகமாகும் முதல் வீரர் ரியான் பராக் தான். 22 வயதிலேயே ரியான் பராக் இந்த சாதனையை படைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ரியான் பராக் 15 இன்னிங்ஸ்களில் 573 ரன்களை விளாசினார்.

இதன் காரணமாகவே ஜிம்பாப்வே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ரியான் பராக்கின் அறிமுகம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால் ரியான் பராக்கிற்கு இந்திய அணியின் அறிமுக தொப்பியை அவரின் தந்தையான பராக் தாஸ் அளித்துள்ளார். தந்தையே அறிமுகத் தொப்பியை அளித்தது ரியான் பராக்கை எமோஷனலாக்கியது.
இந்திய டி20 அணிக்காக அறிமுகமாகும் 112வது வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரியான் பராக் தனது தந்தையின் கனவையும் சேர்த்து நிறைவேற்றியுள்ளார். ஏனென்றால் ரியான் பராக்கின் தந்தை பராக் தாஸும், ரஞ்சி டிராபி மற்றும் முதல்தர கிரிக்கெட்டை விளையாடியவர் தான்.
அசாம் மாநில அணிக்காக 43 முதல்தர போட்டிகளில் விளையாடி 1936 ரன்களையும், 32 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 575 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக ஒரு சதம் மற்றும் 18 அரைசதங்கள், 53 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 1999-2000 ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி பீகார் - அசாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் விக்கெட்டை பராக் தாஸ் வீழ்த்தி இருக்கிறார்.
ரியான் பராக்கின் அறிமுகம் குறித்து பராக் தாஸ் பேசுகையில், தொடங்கும் போது என்ன கனவுடன், இலக்குடன் இருந்தோமோ, அதனை இன்று எட்டிவிட்டோம். ரியான் பராக் கிரிக்கெட் விளையாடியதே இந்த நாளுக்காக தான். ரியான் பராக் பெரிதாக எமோஷனை வெளியில் காட்ட மாட்டார். பெரும்பாலும் எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்தி பழகிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.