ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ரியான் பராக் இந்திய அணிக்காக அறிமுகமானாலும், அவருக்கு பேட்டிங் செய்ய பெரிய அளவில் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது ரியான் பராக் சஞ்சு சாம்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட ரியான் பராக் 22 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சிக்சர் அடங்கும்.

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரியான் பராக், முதல் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது எங்களை விழிக்க வைத்ததாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டிக்கு பிறகு நாங்கள் அனைவரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை மகிழ்ச்சியாக நாங்கள் அனுபவித்தோம். நானும் அபிஷேக் ஷர்மாவும் எங்களுக்கு வழங்கப்பட்ட ஜெர்சியை ஒன்றாக அமர்ந்து திறந்து பார்த்தோம். நான் அவருடைய அறைக்கு சென்று இருவரும் ஒன்றாக இணைந்து ஜெர்சியை திறந்து பார்த்தோம்.
நாங்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இணைந்து விளையாடினோம். அதன் பிறகு 6 ஆண்டுகள் நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தான் அதற்கான நேரம் வந்தது. அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து நான் அறிமுகமானதை ஸ்பெஷலாக நினைக்கின்றேன். இந்திய அணி தடுமாறிய போது நான் சஞ்சு சாம்சனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ராஜஸ்தான் அணிக்கு எப்படி நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோமோ அதை போல் ஒரு பார்ட்னர்ஷிப்பை கடைசி டி20 போட்டியில் ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் யோசித்தோம். மேலும் விக்கெட்டுகள் கடைசி கட்டத்தில் இருந்தால் அதன் பிறகு அதிரடியாக விளையாடி இந்த கடினமான ஆடுகளத்தில் ரன்களை சேர்க்கலாம் என்று நினைத்தோம். அது போல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கில் தலைமையின் கீழ் விளையாடுவது சந்தோசம் தான்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே வயதில் இருந்து விளையாடுகின்றோம். 16 வயதிற்கு உட்பட்ட அணியில் இருந்து நானும் கில்லும் இணைந்து விளையாடி வருகிறோம். கேப்டனாக கில் இல்லை என்றாலும் கூட அவர் எப்போதுமே கேப்டன் போல் தான் நடந்து கொள்வார். களத்திலும் அவர் பிரமாதமாக எப்போதும் செயல்படுவார் என்று ரியான் பராக் பாராட்டு தெரிவித்துள்ளார்.