மும்பை: இந்திய அணியின் கேப்டன் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீடியோ வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த கொண்டாட்டங்கள் இதுவரை இந்தியாவில் முடிவடையாமல் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே பிசிசிஐ சார்பாக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்தந்த மாநில வீரர்களை அழைத்து அந்தந்த மாநிலங்களும் பரிசுத்தொகையை வழங்கி வருகின்றன. இதனிடையே பிசிசிஐ தரப்பில் அடுத்தக் கட்ட இலக்கு என்பதும் நிர்ணயிக்கப்பட்டு அதற்காக திட்டங்கள் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

ஏனென்றால் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பின், இந்திய அணி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டு 2 ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளன. பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பிசிசிஐ ஜெய் ஷா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இந்திய அணியை வாழ்த்துகிறேன். இந்த டி20 உலகக்கோப்பையை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த ஓராண்டில் இந்திய அணி 3 ஐசிசி இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறது. ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம்.
அதன்பின் நடந்த உலகக்கோப்பை தொடரின் 10 வெற்றிகளை தொடர்ந்து ஈட்டி, மக்களின் மனங்களை வென்றோம். ஆனால் உலகக்கோப்பையை நம்மால் வெல்ல முடியவில்லை. அப்போது ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின் போது, அடுத்த ஐசிசி தொடரில் மக்களின் மனங்கள் மட்டுமல்லாமல் கோப்பையையும் வெல்வோம் என்று கூறியிருந்தேன். அது சரியாக நடந்துள்ளது. இந்த வெற்றிக்கு கடைசி 5 ஓவர்கள் மிக முக்கியமான காரணம்.
அதற்காக சூர்யகுமார் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்திய அணியின் அடுத்த இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும், சாம்பியன்ஸ் டிராபி தொடரும் தான். ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு கீழ் இரண்டு கோப்பைகளையும் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.