ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள ருதுராஜ் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று சிஎஸ்கே அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முதல் டி20 போட்டியில் சொதப்பலாக ஆடினார்.

இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் தொடக்க வீரர் சுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தார். ஆனால் முசாரபானி பவுலிங் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ அச்சுறுத்தியது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கவனமாக விளையாட தொடங்கினார். 22 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்து களத்தில் இருந்தார்.
எதிர்முனையில் அபிஷேக் சர்மா பொளந்து கட்ட, ஸ்ட்ரைக் மட்டும் அவருக்கு கொடுத்து வந்தார் ருதுராஜ். ஒரு கட்டத்தில் அபிஷேக் சர்மா 100 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கட்டுப்பாட்டை ருதுராஜ் எடுத்து கொண்டார். சிறப்பாக ஆடிய அவர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்ட, பின்னர் கியரை மாற்றி அதிரடியில் பொளந்து கட்டினார்.
18வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசிய ருதுராஜ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 77 ரன்களை விளாசி அசத்தினார். கடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக எந்தவித அவசரத்தையும் காட்டாமல் ருதுராஜ் கெய்க்வாட் ஆங்கர் இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலமாக விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் எளிதாக நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பவுள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனால் சரியான நேரத்தில் ருதுராஜ் அட்டகாசமான இன்னிங்ஸை விளாசியதாக பாராட்டி வருகின்றனர்.