ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும் விளாசினர்.
ருதுராஜ் கெய்க்வாட் முதல் டி20 போட்டிகளில் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 2வது டி20 போட்டியில் 77 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் நிம்மதியடைந்துள்ளனர். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க போராடி வருகிறார்.

ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக விளையாடினால், நிச்சயம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார். இந்த நிலையில் தோனியின் பிறந்தநாளான ஜூலை 7ஆம் தேதியான இன்று, சரியாக ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களை விளாசியுள்ளார். இதனை சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு ருதுராஜ் அளித்த ட்ரிப்யூட் என்று கொண்டாடி வருகின்றனர்.
இந்த இன்னிங்ஸ் குறித்து ருதுராஜ் பேசுகையில், முதல் 15 பந்துகளை என்னால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இந்த பிட்சில் விளையாடுவது கடினமாக இருந்தது. ஒரு பந்தை கூட சரியாக மிடில் ஆஃப் தி பேட்டில் அடிக்க முடியவில்லை. அப்போது நானும் அபிஷேக் சர்மாவும் நமக்கான நேரத்தை எடுத்து செட்டிலான பின், அட்டாக்கில் இறங்கலாம் என்று பேசிக் கொண்டோம்.
ஸ்பின்னர்களை அபிஷேக் சர்மா சிறப்பாக அட்டாக் செய்தார். இந்த விக்கெட் இரு பக்கமும் வெவ்வேறு விதமாக இருந்தது. ஒரு பக்கம் பந்துகள் நின்று வந்தன. இன்னொரு பக்கம் கொஞ்சம் வழுக்கியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது போல் விளையாடினோம் என்று தெரிவித்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.