ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி வீரர்கள் களமிறங்கவுள்ளனர். ஏற்கனவே சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏனென்றால் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் ஆகிய 4 தொடக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கேப்டன் சுப்மன் கில் நிச்சயம் விளையாடுவார். மற்றொரு ஓபனராக யார் களமிறங்குவார் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுப்மன் கில் பேசுகையில், தொடக்க வீரராக நானும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
அதேபோல் நம்பர் 3 வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என்று கூறியுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி சுமார் 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக ஏற்கனவே தொடக்க வீரராக ருதுராஜ் ஏராளமான முறை களமிறங்கி விளையாடி அனுபவத்துடன் உள்ளார்.
ஆனால் தனது நண்பனுக்காக சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாடை நம்பர் 3 வரிசைக்கு பின் தள்ளியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடிய போது அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 484 ரன்களை குவித்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக பல்வேறு தருணங்களில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
இதனிடையே கிரிக்கெட் விமர்சகர்கள் தரப்பில், சுப்மன் கில்லின் முடிவு சரியானதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கும் போது இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்கள் என்று பேட்டிங் வரிசை அமையும். அதேபோல் சுப்மன் கில் நிதானமாக தொடங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அபிஷேக் சர்மாவின் தேவையும் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.