ஹராரே: ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்துவீச்சாளர் மவுடா பந்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸ் 110 மீட்டர் பறந்து சென்று விழுந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், பின்னர் புதிய பந்து பயன்படுத்தப்பட்டது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி பேட்டிங்கின் போது 5 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அப்போது சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இருவரும் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டெடுத்தனர்.

இந்த இன்னிங்ஸின் போது சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக ஆடினார். அப்போது 12வது ஓவரை வீசுவதற்காக சுழற்பந்துவீச்சாளரான பிரண்டன் மவுடா அழைக்கப்பட்டார். அவர் சஞ்சு சாம்சனுக்கு ஒய்டு யார்க்கர் லெந்தில் பவுலிங் செய்தார். இதனால் முதல் 2 பந்துகளில் சஞ்சு சாம்சனால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.
இந்த ஏமாற்றம் சஞ்சு சாம்சன் உடல்மொழியிலேயே தெரிந்தது. இந்த நிலையில் 3வது பந்து ஒய்டாக செல்ல, அடுத்த பந்து நிச்சயம் ஸ்டம்பை நோக்கி வரும் என்பதை சஞ்சு சாம்சன் கணித்தார். சரியாக மவுடா வீசிய 3வது பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சாகி கொஞ்சம் மேலே உயர்வதை பார்த்த சஞ்சு சாம்சன், நேராக சிக்சருக்கு தூக்கினார்.
சஞ்சு சாம்சன் அடித்த அந்த பந்து மைதானத்திற்கு வெளியில் சென்று விழுந்தது. இதனால் நடுவர்கள் புதிய பந்தை கொண்டு வருமாறு சிக்னல் கொடுத்தனர். பின்னர் அந்த பந்து சென்று விழுந்த அளவு கணக்கிடப்பட்ட போது, 110 மீ சென்று விழுந்தது தெரிய வந்தது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே வீரரின் ஒய்டு யார்க்கர் லைனால் சஞ்சு சாம்சன் கோபத்தில் பொளந்தது தெரிய வந்தது.
சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் மிடில் ஆர்டரில் நம்பிக்கையளிக்கும் வீரராக சஞ்சு சாம்சன் முதிர்ச்சியடைந்துள்ளார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்த போது, ஒருநாள் கிரிக்கெட்டை போல் நிதானம் காத்து, தேவையான நேரத்தில் அட்டாக் செய்ததால், இலங்கை சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சனுக்கு இடம் உறுதி என்று பார்க்கப்படுகிறது.