ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், சிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்திய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஜிம்பாப்வே அணி தரப்பில் வெஸ்லி - மருமாணி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவருமே ரன்கள் சேர்க்க அவசரம் காட்டாததால், இந்திய அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர்.

4 ஓவர்கள் முடிவிலேயே 35 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 5வது ஓவரை வீசுவதற்கு ரவி பிஷ்னாய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரிலும் விக்கெட் வீழ்த்த முடியாததால், உடனடியாக வாஷிங்டன் சுந்தர் அட்டாக்கில் வந்தார். இவர்களின் ஓவர்களையும் சமாளித்து ஆடிய தொடக்க வீரர்கள், 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை விளாசினார். இதனால் கட்டாயம் விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவை இந்திய அணிக்கு ஏற்பட்டது.
அப்போது திடீரென கேப்டன் சுப்மன் கில் தனது நண்பனான அபிஷேக் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். இந்த ஓவரை பயன்படுத்தி கொள்ள நினைத்த மருமாணி, அடுத்தடுத்து 2 ரன்களாக ஓடி ரன்களை எடுத்தார். இந்த நிலையில் 4வது பந்தை சிக்சர் அடிக்க முயன்று மருமாணி தூக்கியடிக்க, அது நேராக ரிங்கு சிங்கின் கைகளில் விழுந்தது. இதனால் அவர் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் 10வது ஓவரை வீச சிவம் துபே அழைக்கப்பட்டார். கடந்த போட்டியில் சிவம் துபேவின் மோசமான பவுலிங் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. ஏராளமான சிக்சர்களை விட்டுக் கொடுத்திருந்ததால், சிவம் துபேவுக்கு பவுலிங் கொடுத்தது தவறாக முடிவாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய சிவம் துபே, முதல் 5 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
கடைசி பந்தில் வெஸ்லி அட்டாக் செய்ய நினைத்து தூக்கியடிக்க, அந்த பந்து மீண்டும் ரிங்கு சிங் கைகளில் சென்றது. இதனால் ஜிம்பாப்வே அணி கண் இமைக்கும் நேரத்தில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடந்த சில போட்டிகளாக மோசமான பவுலிங் செய்த இருவரும் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி தாங்களும் ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.