மும்பை: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது முதல் ஆளாக சுப்மன் கில் தான் என்னை செல்ஃபோனில் அழைத்து வாழ்த்தியதாக இளம் வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். வீட்டுக்கு சென்ற போது எனக்கு முன் என்னுடைய பெற்றோர் இருவரும் நேர்காணல் அளித்திருந்ததை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்ததாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடக்கும் டி20 தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று ஜிம்பாப்வே சென்றனர். இந்த டி20 தொடர் இந்திய அணியின் அடுத்த 2 ஆண்டுகளுக்கான பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் நடக்கிறது. இதற்காக சீனியர் வீரர்கள் ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரியான் பராக், துருவ் ஜுரெல், ஹர்சித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், துஷார் தேஷ்பாண்டே என்று ஏராளமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஐதராபாத் அணிக்காக அதிரடி தொடக்கம் கொடுத்த அபிஷேக் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 484 ரன்களை விளாசிய அபிஷேக் சர்மா, பிளே ஆஃப் சுற்றின் போது பவுலிங்கிலும் மிரட்டலாக செயல்பட்டார். இதனால் அபிஷேக் சர்மாவை சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்க பிசிசிஐ தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு அறிமுகமாக உள்ள அபிஷேக் சர்மா பேசுகையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், சுப்மன் கில் தான் முதல் ஆளாக எனக்கு செல்ஃபோனில் அழைத்தார். அதன்பின் நான் வீட்டுக்கு சென்று நேர்காணல் கொடுப்பதற்கு முன்பாகவே, எனது பெற்றோர் இருவரும் நேர்காணல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

அதனை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் விளையாட தொடங்கிய நாள் முதல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். இந்திய மண்ணில் அறிமுகமாவேன் என்று தான் நினைத்திருந்தேன். ஜிம்பாப்வே மண்ணில் அறிமுகமாவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் பயிற்சி பட்டறையில் உருவாக்கப்பட்டவர் அபிஷேக் சர்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக யுவராஜ் சிங்குடன் அபிஷேக் சர்மா பயணித்து வருகிறார். அதேபோல் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர். இதனால் இவருக்கும் சுப்மன் கில்லுக்கும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.