ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறி இருக்கிறார். டாப் ஆர்டர் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஏமாற்றிய நிலையில், பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் மோசமான ஷாட் காரணமாக ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் தேர்வு செய்யப்படாத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலமாக இந்திய அணியின் எதிர்கால கேப்டனை தயார் செய்யும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றன.

ஏனென்றால் சுப்மன் கில் தொடக்கத்தில் நிதானமாகவும், 10 ஓவர்களுக்கு பின்னரே அதிரடியாகவும் விளையாடும் பாணியை பின்பற்றி வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது ஸ்டைலை சுப்மன் கில் மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் 2 போட்டிகளில் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார்.
ஆனால் 3வது டி20 போட்டியில் 47 பந்துகளில் 67 ரன்களும், 4வது டி20 போட்டியில் 39 பந்துகளில் 58 ரன்களும் சேர்த்து கம்பேக் கொடுத்தார். இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த அபிஷேக் சர்மா முசாரபணி பவுலிங்கில் 14 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி 4 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்து தடுமாறியது. தொடர்ந்து 5வது ஓவரின் 2வது பந்தில் சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேம்பெல் தவறவிட்டார். இதனால் இன்றைய நாள் சுப்மன் கில்லின் நாளாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த 3 பந்துகளையும் டாட் பாலாக ஆடிய அவர், ஷார்ட்டாக வீசிய கடைசி பந்தில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்த போது, சுப்மன் கில் தேவையில்லாத ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுத்து சான்ஸையும் வீணடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியும் 5 ஓவர்களில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.