ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4- 1 என்ற அளவில் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டியின் முடிவில் இந்திய அணி கோப்பையை தன் வசமாக்கியது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கோப்பையை பெற்றார். அதன் பின் அவர் செய்த விஷயத்தால் இந்த தொடரில் அறிமுகமான நான்கு இளம் இந்திய வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுப்மன் கில் கோப்பையைக் கொண்டு வந்து, இந்த தொடரில் அறிமுகம் ஆகி இருந்த அபிஷேக் சர்மா, துருவ் ஜுரேல், ரியான் பராக் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய நால்வரிடமும் வழங்கினார். இதை அடுத்து அவர்கள் நால்வரும் கோப்பையை ஒன்றாக உயர்த்தி காட்டி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முறையை தோனி கேப்டனாக இருக்கும்போது அறிமுகம் செய்து இருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் இந்திய அணி ஏதேனும் ஒரு கோப்பையை வெல்லும் போது, அந்த தொடரில் அறிமுகமான அல்லது அந்தத் தொடரில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரரின் கையில் கோப்பையை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அவருக்கு பின் விராட் கோலி கேப்டனான பின் அதே முறையை தொடர்ந்தார். அதன் பின் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆன போதும் அந்த முறை நீடித்தது. தற்போது ஜிம்பாப்வே டி20 தொடருக்கான தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில்லும் அந்த முறையை தொடர்ந்தார். இதை அடுத்து ரசிகர்கள் சுப்மன் கில் செயலை பாராட்டி வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்து இருந்தது. ஜிம்பாப்வே அணி வலுவாக இல்லாத போதும் இந்திய அணியை முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதை அடுத்து இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அதன் பின் மீதம் இருந்த போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தொடரின் முடிவில் 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் கோப்பையையும் வென்றது இந்திய அணி.