ஹராரே : ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 போட்டி கொண்ட தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் பல சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் சுப்மன் கில் தலைமையில் தான் இந்திய அணி களம் இறங்கியது.
இதில் முதல் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணி தோற்றாலும் கடைசி நான்கு போட்டிகளிலும் அபாரமாக ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த சூழலில் முதல் தொடரில் கேப்டனாக களம் இறங்கி கில் கோப்பை வென்ற நிலையில் அவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கில்லின் கேப்டன்ஷிப் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதற்கு காரணம் கில் சுயநலமாக செயல்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களையும் ரசிகர்கள் பட்டியலிட்டு சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆக தொடக்க வீரராக கில் களம் இறங்கி வந்த நிலையில் அபிஷேக் சர்மா சதம் அடிக்கும் தன்னுடைய இடம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காக அபிஷேக் சர்மாவை பேட்டிங் வரிசையில் மாற்றியதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு உள்ளனர். இதை போன்று ஜெய்ஸ்வால் கடந்த நான்காவது டி20 போட்டியில் சதத்தை நோக்கி சென்ற நிலையில் அதனை கில் வேண்டும் என்று தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது அனைத்திற்கும் மேலாக ருதுராஜை கடைசி டி20 போட்டிகளில் இருந்து கில் நீக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நம்பர் மூன்றாவது வீரராக விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேண்டுமென்றே அவருடைய பேட்டிங் வரிசையை மாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேப்டன் என்பவர் சுயநலம் இன்றி அணிக்காக யோசிக்க வேண்டும் என்றும், ஆனால் இதில் சுயநலத்துடன் தமது இடத்திற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று அச்சப்படுவதாகவும் ரசிகர்கள் கடுமையாக சாடி இருக்கின்றனர். மற்றபடி பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது, ஃபில்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவது, அணி தேர்வு போன்ற விஷயங்களில் கில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது அவருக்கு பின்னடைவை கொடுத்திருக்கின்றது.