ஹராரே : இந்தியா, ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதில் கேப்டனாக களம் இறங்கிய கில் அரைசதம் அடித்தார். இதனை அடுத்து ஜிம்பாப்வே அணியும் பேட்டிங்கில் அதிரடி காட்டியது. எனினும் இந்திய வீரர்கள் பில்டிங்கில் கலக்கியதால் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கில், இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த போட்டி எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு முக்கியமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே நல்ல தொடக்கத்தை கொடுத்தோம்.
ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் நிலையற்ற தன்மையில் இருந்தது. கணிக்க முடியாத படி இருந்தது. சில பந்துகள் நன்றாக எகிறி வந்தது. எனவே லென்த் பாலை அடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இதுதான் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்களிடம் நான் கூறி விவாதித்தேன். இந்த ஆடுகளத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.
அதுவும் புதிய பந்து தான் இந்த ஆடுகளத்தில் நன்றாக செயல்படும் என்பதை கணித்தோம். பந்து கொஞ்சம் பழையதாக மாறினால் அதன் பிறகு ரன் குவிப்பது சுலபமாகி விடுகிறது. எங்கள் அணியில் அனைவரும் வெற்றிக்கு பங்காற்றுகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறியாகும் என்று கில் பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆட்டநாயகன் விருதை வென்ற வாஷிங்டன் சுந்தர், கடந்த இரண்டு போட்டியில் விட இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஜிம்பாப்வே அணி வீரர்களின் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், எங்களுடைய பிளான்களை சரியாக செய்துதான் எங்களால் வெற்றி பெற முடிந்தது என்றும் கூறிய வாஷிங்டன் சுந்தர் வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை கூறினார்.