ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வாரத்தில் கத்துக்குட்டி அணியாக ஜிம்பாப்வே அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்த போட்டியின் மூலமாக இளம் வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக முதல்முறையாக களமிறங்கினார். முதல் போட்டியிலேயே சுப்மன் கில் தோல்வியை சந்தித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியஅணியை வழிநடத்திய 14வது கேப்டன் சுப்மன் கில். இதில் பெரும்பாலான கேப்டன்கள் முதல் போட்டியில் வெற்றியை எட்டியுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவர் மட்டுமே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். அந்த வகையில் கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியடைந்த 3வது கேப்டன் என்ற மோசமான சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
அதேபோல் இந்திய அணி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. அதேபோல் நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்தித்ததில்லை. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டன்சியை ஏற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியிலேயே சுப்மன் 2 மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்த 3வது கேப்டனாக சுப்மன் கில் உருவாகியுள்ளார். இதற்கு முன்பாக கேப்டனாக இருந்த ரஹானே மற்றும் தோனி ஆகியோரின் கீழ் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பிரின்ஸ் சுப்மன் கில் கேப்டன்சியில் அடுத்தடுத்த போட்டிகளிலேயே முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உருவாகியுள்ளது.