சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், தங்கள் அணியின் பேட்டிங் செயல்பாட்டைப் பார்த்துத் தான் பெருமைப்படுவதாக ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்தச் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இருப்பினும், அந்த அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து தனி ஆளாகப் போராடியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு தோல்வி குறித்துப் பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, "நான் எப்போதுமே எந்தவொரு விஷயத்திலும் நேர்மறையான பக்கங்களையே அதிகம் பார்க்கும் நபர். இன்றைய போட்டியைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்த நேர்மறையான விஷயம் எங்கள் பேட்டிங் தான். கடந்த போட்டியில் 250 ரன்களைத் துரத்தியபோது எங்கள் பேட்டிங் வரிசையில் ஒருவித பதற்றமும் அவசரமும் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. பெரிய இலக்கைத் துரத்தும்போது முதல் ஆறு ஓவர்களிலேயே போட்டியை வென்றுவிட முடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் முதல் ஆறு ஓவர்களில் தவறு செய்தால் போட்டியை எளிதாகக் கோட்டைவிட நேரிடும்.
ஆனால், இன்று முதல் ஆறு ஓவர்களில் எங்கள் பேட்டர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டனர். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் நேரம் எடுத்துக்கொண்டனர். கடந்த போட்டியுடன் ஒப்பிடுகையில் இன்று எங்கள் வீரர்கள் பேட்டிங் செய்த விதம் எனக்குப் பெருமையாக உள்ளது. அதில் இருந்து நான் நிறைய நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
அதேவேளையில், பந்துவீச்சில் நடந்த தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். "நாங்கள் பந்துவீச்சில் தற்காப்புத் திட்டங்களை இன்னும் சற்று சிறப்பாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆக்ரோஷமாகப் பந்துவீச முற்பட்டு, திட்டங்களைச் செயல்படுத்துவதில் தவறிழைத்துவிட்டனர். இதனால் இந்திய அணி எளிதாக அதிக ரன்களைக் குவித்துவிட்டது.
ஆட்டம் ஒருமுறை கைமீறிப் போனால், அதை மீண்டும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். எங்கள் தற்காப்புத் திட்டங்களைச் சரியாகச் செய்திருந்தால், இந்திய அணியை 210 அல்லது 220 ரன்களுக்குள் நிச்சயமாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அணியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், "எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது, ஆனால் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. எங்கள் அணி இன்னும் முழுமையடையவில்லை, முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது. அணியில் உள்ள பெரும்பாலான இளம் வீரர்களுக்கு இதுவே முதல் உலகக் கோப்பையாகும்.
அதேபோல் அவர்கள் இந்தியாவில் விளையாடுவதும் இதுவே முதல்முறையாகும். இதை நான் தோல்விக்கான ஒரு காரணமாகச் சொல்லவில்லை என்றாலும், கடந்த போட்டியில் கற்ற பாடங்களை இன்று பேட்டிங்கில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதைக் காண முடிந்தது. எங்கள் வீரர்கள் எவ்வளவு சீக்கிரம் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதை இன்று நிரூபித்துவிட்டனர்.
முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அடுத்ததாகத் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் ஒரு சிறப்பான செயல்பாட்டை நான் எதிர்பார்க்கிறேன். உலகக் கோப்பையில் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, நாம் மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஒன்றில் சறுக்கினாலும் போட்டி நம் கையை விட்டுப் போய்விடும். எனவே, கடைசிப் போட்டியில் எங்கள் முழுத் திறமையையும் ஆடுகளத்தில் வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்" என்று சிக்கந்தர் ராசா நம்பிக்கை தெரிவித்தார்.