சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
அபிஷேக் சர்மாவுக்கு இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் விளையாடிய சஞ்சு சாம்சன், 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஆட்டத்தின் 4வது ஓவரில் பிளெஸ்ஸிங் முசரபானி வீசிய பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த ரியான் பர்லிடம் கேட்ச் கொடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார்.

முசரபானி வீசிய அந்த ஸ்லோயர் பந்தை சரியாகக் கணிக்க முடியாமல், சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இது குறித்து வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி, "சஞ்சு சாம்சன் இந்த விக்கெட்டால் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார்" என்று கூறினார்.
ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர், சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். "சாம்சன் நிச்சயமாக ஏமாற்றம் அடைந்திருப்பார். ஏனென்றால், அவர் இந்த குறிப்பிட்ட திசையிலேயே பலமுறை ஆட்டமிழந்துள்ளார். அவருக்கு எதிராக ஷார்ட் பால்களை வீச வேண்டும், டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பீல்டரை நிறுத்த வேண்டும் என்பது அனைத்து எதிரணிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
அதேபோல, முசரபானியின் உயரம் பந்து சற்று கூடுதலாக எழும்ப உதவியது. அதனால் பந்து பேட்டின் மையப்பகுதியில் சரியாகப் படவில்லை. சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் என அணிக்கு மிகச் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுத் தந்தார். ஆனால், மீண்டும் ஒருமுறை பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்துள்ளார்" என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
சுனில் கவாஸ்கர் இவ்வாறு விமர்சித்த நிலையில், மற்றொரு முன்னாள் வீரரான இர்பான் பதான் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், "இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் சராசரி வெறும் 7 ரன்களாக மட்டுமே இருந்தது. இது உலகக் கோப்பையில் பங்கேற்ற அனைத்து அணிகளை விடவும் மிகவும் குறைவானதாகும்.
ஆனால் இன்று சஞ்சு சாம்சன் அணிக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகச் சிறந்த தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார்" என்று பாராட்டியுள்ளார். இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சஞ்சு சாம்சன் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். அவர் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை அடுத்து வந்த வீரர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி இந்தத் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 3வது வரிசையில் களமிறங்கிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
அதேபோல, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்து அசத்தினார். ஜிம்பாப்வே அணியின் பீல்டிங் இந்தப் போட்டியில் மிகவும் சுமாராகவே இருந்தது. சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் இருந்தபோதும், இஷான் கிஷன் 26 ரன்களில் இருந்தபோதும் ஜிம்பாப்வே பீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

இதனைப் பயன்படுத்தி இந்திய பேட்டர்கள் ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
