சென்னை: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திருக்கிறது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு எளிதில் இந்தியா தகுதி பெற்ற விடும்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நான் அனைத்தையுமே எனக்கு பின்னால் விட்டுவிட்டு அடுத்தது குறித்து யோசிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். லீக் சுற்றில் என்ன நடந்தது? இல்லை அகமதாபாத்தில் கடைசி போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து எல்லாம் நாங்கள் பெரியதாக யோசிக்கவில்லை.

எங்கள் அணி நிர்வாகிகள் நாங்கள் எவ்வாறு கடந்த ஆண்டில் செயல்பட்டோம் என்பது குறித்து ஒரு வீடியோ காட்சியை எங்களுக்கு காண்பித்தார்கள். அதை பார்த்தவுடன் எங்கள் அனைவருக்கும் நல்ல பாசிட்டிவிட்டி கிடைத்தது. அதன் பிறகு இங்கு நாங்கள் தெளிவான மனதோடு வந்தோம். தொடக்க வீரர்கள் இருந்து ஏழாவது வீரர் வரை அனைவருமே பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார்கள்.

இதுதான் கடந்த சில போட்டிகளில் எங்கள் அணியில் மிஸ் ஆனது. இந்த வெற்றி குறித்து நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் இன்னும் பந்துவீச்சில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் வெற்றி என்பது வெற்றி தான். இந்த வெற்றியை நாங்கள் எடுத்துக் கொண்டு செல்கின்றோம். எனினும் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்பாக செயல்பட வேண்டும்.
ஏனென்றால் அடுத்தது நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம். அதற்காக நான் ஜிம்பாவே அணியை குறைத்து மதிப்பிடவில்லை அவர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இன்று அருமையாக ரன்கள் சேர்த்திருக்கிறார்கள். ஆடுகளமும் நன்றாக இருந்தது. இவ்வளவு பெரிய இலக்கை அவர்கள் எதிர்நோக்கி விளையாடிய விதம் உண்மையிலேயே புத்திசாலித்தனமாக இருந்தது.

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் எங்கள் பந்துவீச்சு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், நாங்கள் இன்னும் கொஞ்சம் புத்தியை பயன்படுத்தி சில முக்கிய தருணத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். இன்னும் நாங்கள் தைரியமாக எங்கள் முடிவில் இருக்க வேண்டும். நேர்மறையான பாதையை தேர்ந்தெடுப்பது தவிர வேறு எந்த வழியும் எங்களுக்கு கிடையாது. நாங்கள் கொல்கத்தாவுக்கு சென்று அடுத்த போட்டி குறித்து யோசிப்போம். அதுவரை ஒருநாள் நாங்கள் பயணம் மற்றும் ரிலாக்ஸ்காக செலவிடுவோம் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.