ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் ஆல் ரவுண்டர் டியான் மியர்ஸ் வீசிய ஓவரில் அபிஷேக் சர்மா பவுண்டரி மழை பொழிந்தார். அதன் பின் தியான் பந்து வீசவே இல்லை. அபிஷேக் சர்மா அந்த ஓவரில் அதிரடியாக ரன் குவித்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவித்தது இந்திய அணி.
அபிஷேக் சர்மா அந்த ஓவரில் மூன்று ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்தார். அவரது விக்கெட்டை வீழ்த்த வந்த டியான், அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அதன் பின் அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி வந்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஒரு புறம் நிதானமாக ஆட, மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன் குவித்தார்.
அவரை வீழ்த்த வேண்டி ஆல் ரவுண்டர் டியான் மியர்ஸ்-ஐ 11வது ஓவரை வீச அழைத்தார் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா. டியான் வீசிய அந்த ஓவரில் மூன்று ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து 28 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா, அதன் பின் அவர் அதிரடியாக ஆடினார். 46 பந்துகளில் சதம் கடந்த அவர். அதற்கு அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.