மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் எப்படி காயம் இல்லாமல் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எந்த ஒரு வீரரும் காயத்துக்கு பயப்படாமல் களத்தில் வெற்றி ஒன்றை மட்டுமே நினைத்து, எந்த சுயநலமும் இன்றி விளையாட வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
கவுதம் கம்பீர் இது குறித்து பேசுகையில், "ஒரு தொழில் முறை விளையாட்டு வீரருக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், அவருக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சில வீரர்களுக்கு மட்டும் ஓய்வு கொடுத்து, அவர்களது பணிச்சுமையை மட்டும் நிர்வகிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், ஒரு வீரர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றால், அவர் தனது காயங்கள் அனைத்திலிருந்தும் மீண்டு இருக்க வேண்டும்."

"நீங்கள் உங்கள் கிரிக்கெட்டை முழு உண்மையுடன் அணுக வேண்டும். நான் எனது பேட்டை எடுத்தேன் என்றால், போட்டியின் முடிவின் மீது கவனம் செலுத்த மாட்டேன். உண்மையாக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். நீங்கள் உங்கள் வேலைக்கு உண்மையாக இருந்தால், முடிவுகள் உங்கள் பின்னே வரும்.
"அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதை தான் நாம் செய்ய வேண்டும். ஒரு அணியின் ஒட்டுமொத்த குறிக்கோள் என்பது, எந்த ஒரு தனி மனிதனின் குறிக்கோளை விடவும் முக்கியமானது. நான் ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பேன். மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆனால், அது எல்லாமே அணியின் நலனை கருதி நான் செய்தது ஆகும். அந்த மனநிலை இப்பொழுது உள்ள வீரர்களுக்கும் தேவை. உங்கள் அணியை வெற்றி பெற வைப்பதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட சாதனைகளில் அல்ல."
"ஒரு குழு விளையாட்டு என்பது சுயநலமற்ற மனநிலையை கேட்கும். தனிப்பட்ட சாதனைகள் முக்கியமல்ல. அணி தான் முக்கியம்" என்று கூறி இருக்கிறார். அவர் பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள நிலையில் இனி எந்த ஒரு வீரரும் காயம் ஏற்பட்டு விடும் என்ற பயத்துடன் தயங்கி, தயங்கி ஃபீல்டிங் செய்வதோ தங்களின் தனிப்பட்ட ரெக்கார்டுகளுக்காக பந்துகளை வீணடிப்பதோ செய்தால் அணியில் இடமில்லை என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் கவுதம் கம்பீர்.