ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்வியால் இந்திய அணி படுமோசமான சர்வதேச 20 சாதனை ஒன்றை செய்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் ஜிம்பாப்வே, இந்திய அணிக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை அடித்து, வெற்றி பெற்ற அணிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி20 போட்டிகளில் சேஸிங்கில் மிகக் குறைந்த ஸ்கோருக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி 127 ரன்கள் அடித்து, பின்னர் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.
சமீபத்தில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆன அதே இந்திய அணி தற்போது டி20 வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையையும் பதிவு செய்துள்ளது. அதிலும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணி, சாம்பியன் அணியான இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி என்றாலும், இது மோசமான தோல்வி என்பதால் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. கேப்டன் சுப்மன் கில் மட்டுமே ஓரளவு போராடி 31 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் கடைசி ஓவர் வரை நின்று 34 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். ஆவேஷ் கான் 16 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தனர். இந்த தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் இருப்பதால் அவை அனைத்திலும் வெற்றி பெற்று இந்த தோல்வியை ஈடு கட்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.