ஹராரே: இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் முன் தனது ஷூவை அவிழ்த்துக் காட்டி சைகை செய்து அவமரியாதையாக நடந்து கொண்டார் ஜிம்பாப்வே வீரர் லூக் ஜோங்வே. இது குறித்து பின்னர் விளக்கம் கூறிய அவர், தனது காதலியுடன் அதற்கு முந்தைய தினம் பேசியதாகவும், அப்போது இப்படி ஷூவை அவிழ்த்து காட்ட வேண்டும் என அவருக்கு கூறியதாகவும், அதையே தான் செய்ததாகவும் கூறி இருக்கிறார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 115 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடிய போது விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போது ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் லூக் ஜோங்வே 10 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் துருவ் ஜுரேல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். துருவ் 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.
இந்திய வீரர் ஒருவரை ஆட்டமிழக்க செய்தவுடன் அவர் ஷூவை அவிழ்த்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் இது குறித்து பேசிய லூக் ஜோங்வே, முதல் போட்டிக்கு முன் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது விக்கெட் வீழ்த்தினால் அதை எப்படி கொண்டாட வேண்டும் என இருவரும் விவாதித்ததாகவும், அப்போது அவரது காதலி விக்கெட்டை வீழ்த்தினால் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து போன் பேசுமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
தனது காதலி சொன்னதை அப்படியே செய்து காட்டியிருக்கிறார் லூக். அதற்காக இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளலாமா? என இந்திய ரசிகர்கள் இது குறித்து சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சி இதே போல ஷூவை அவிழ்த்து காட்டி சர்ச்சையில் சிக்கினார். முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.