ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங் ஆடிய ஆட்டத்தை பார்த்து நொந்து போன இந்திய ரசிகர்கள் அணி, அவரது இடத்தை சிவம் துபே பறித்துக் கொண்டார் என பேசவே மாட்டோம் எனவும், இதுவரை சிவம் துபேவை விமர்சித்து வந்தது தவறுதான் என கூறி வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது அவருக்கு பதிலாக ஐந்தாம் வரிசையில் சிவம் துபே இந்திய அணியில் பேட்டிங் செய்தார். உலகக் கோப்பையில் சிவம் துபே சரியாக ரன் குவிக்காத போதெல்லாம், ரசிகர்கள் ரிங்கு சிங்கை நினைவுப்படுத்தி வந்தனர்.

மேலும், சிவம் துபே, ரிங்கு சிங் இடத்தை அபகரித்துவிட்டார் என்றும், அவரால் இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். எனினும், உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று மற்றும் அரை இறுதியில் சிவம் துபே ஓரளவு ரன் சேர்த்தார். சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு அவரது பேட்டிங்கும் முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை அளிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் களமிறங்கினார் ரிங்கு சிங். இந்திய அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்த நிலையில், ரிங்கு சிங் இரண்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சி அளித்தார். இதை அடுத்து அவருக்கு ஆதரவளித்து, அவரது பிம்பத்தை பூதாகரமாக காட்டி வந்த ரசிகர்கள் இனி சிவ, துபேவை விமர்சிக்கவே மாட்டோம் என சமூக வலைதளத்தில் பல்டி அடித்துள்ளனர்.
அனுபவம் குறைந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ரிங்கு சிங் டக் அவுட் ஆனதை அடுத்து அவரது ஆதரவு ரசிகர்களே மனம் மாறி உள்ளனர். இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய இந்திய அணி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இனிவரும் போட்டிகளிலாவது ரிங்கு சிங் அதிரடியாக ஆடினால் மட்டுமே அணியில் தனது இடத்தை தக்க வைக்க முடியும்.