மும்பை: இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என சில மாதங்கள் முன்பு வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தார் ரிங்கு சிங். இந்திய டி20 அணியில் அவர் அசைக்க முடியாத வீரராக இருப்பார். ஃபினிஷர் என்ற இடத்தை அவரிடம் இருந்து பறிக்கவே முடியாது என பலரும் எண்ணிய நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
15 வீரர்கள் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத அவர், மாற்று வீரராகவே உலகக் கோப்பை அணியுடன் பயணம் செய்தார். தற்போது டி20 உலகக்கோப்பை நடந்து முடிந்துள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்திய டி20 அணியில் ரிங்கு சிங்கிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்றே பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து பதில் கிடைக்கிறது. அதற்கு முக்கிய காரணம், இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியா தான். தற்போது நடைபெற உள்ள ஜிம்பாப்வே டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட உள்ளார். அதற்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த அணியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகிய நால்வரில் இருவர் துவக்க வீரர்களாக இடம் பெறுவார்கள். மூன்றாம் வரிசையில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது திலக் வர்மா இடம்பெற வாய்ப்பு உள்ளது. நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாம் வரிசையில் சிவம் துபே அல்லது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக வரக்கூடிய வீரர் இடம் பெறுவார். ஆறாம் வரிசையில் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பேட்டிங் இறங்குவார்.
அடுத்த ஐந்து இடங்களிலும் நான்கு ஓவர்கள் வீசக்கூடிய ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். இவர்களைத் தவிர பேட்ஸ்மேன்களாக அணியில் இடம் பெற வேண்டி ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல், ரியான் பராக் ஆகியோர் காத்திருப்பில் உள்ளனர். எனவே, ரிங்கு சிங்கிற்கு டி20 அணியில் இடம் கிடைப்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவர் ஐந்தாம் வரிசை அல்லது ஆறாம் வரிசையில் மட்டுமே பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவரது சிறப்பு பினிஷிங் செய்வதுதான். அந்த ஒரு இடத்துக்காக பல்வேறு வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், அதன் பின் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பும் போது அவருக்கு இடம் இருக்குமா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. ஜிம்பாப்வே டி20 தொடரில் ரிங்கு சிங் அதிக அளவில் ரன் குவித்தால் அடுத்த டி20 தொடர் வரை தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.