ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமான சரிவை சந்தித்தது. பொறுப்பாக ஆடி இருக்க வேண்டிய மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விலகிச் சென்ற பந்தை அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது விக்கெட்டாக அவர் வீழ்ந்த நிலையில் அடுத்து ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் வரிசையும் சரிவை சந்தித்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டியில் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடியது. இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அபிஷேக் ஷர்மா தான் சந்தித்த நான்காவது பந்திலயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அடுத்து இந்த அணியிலேயே அதிக அனுபவம் கொண்ட கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார்கள் என ரசிகர்கள் நம்பினர். அதிலும் ருதுராஜ் கெய்க்வாட்டை டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாததால் இந்த முறை அவர் அரை சதம் அடித்து டி20 அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ருதுராஜ் 9 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். முசார்பானி வீசிய நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தை அடிக்க ஆசைப்பட்டு பேட்டில் எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்தார். இந்திய அணி 15 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பிட்ச்சை சரியாக கணிக்காமல் வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.
ருதுராஜ் கெய்க்வாட் குறைந்தது பவர் பிளேப ஓவர்கள் வரையாவது நின்று ரன் குவித்திருக்க வேண்டும் அல்லது பிட்ச் மந்தமாக இருப்பதை உணர்ந்து சற்று நிதானமாக ரன் சேர்த்து இருக்கலாம். 116 ரன்கள் இலக்கு என்பது சிறியது என்ற நிலையில் அவர் இன்னும் நிதானமாக ஆடியிருக்கலாம் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.