மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்திய அணியில் இதுவரை சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில தொடர்களில் அவர் சேர்க்கப்படுவதும் பின்னர் நீக்கப்படுவதுமாக அவரை அலைக்கழித்து வருகிறது பிசிசிஐ. அவர் டாப் ஆர்டரில் ஆடக்கூடிய வீரர் என்பதால் மூத்த வீரர்களால் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் டாப் ஆர்டரில் ஆடிவந்த வீரர்கள். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.

ஆனால், அந்த அணியில் அவருடன் சேர்த்து நான்கு துவக்க வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா ஆகியோருடன் ருதுராஜ் கெய்க்வாட் பெயரும் இடம் பெற்று இருந்தது. இவர்கள் நால்வரில் மூவர் முதல் மூன்று வரிசையில் பேட்டிங் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. அதனால், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்த தொடரில் ஒரு போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவியது.
இதனிடையே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்று இருந்த ஜெய்ஸ்வால் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவர் உலகக்கோப்பைக்காக வெஸ்ட் இண்டீஸ் சென்ற நிலையில் மழையின் காரணமாக விமான பயணம் செய்ய முடியாமல் சக இந்திய வீரர்களுடன் அங்கேயே தங்கி இருக்கிறார்.
ஜிம்பாப்வே டி20 தொடரில் இடம்பெற்ற ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரையும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் இருந்து பிசிசிஐ நீக்கி உள்ளது. அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூன்று மாற்று வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த மாற்றத்தால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜெய்ஸ்வால் இல்லாததால் சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்வார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நான்காம் வரிசையில் ரியான் பராக், ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் ரிங்கு சிங் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
அடுத்த ஐந்து இடங்களில் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். ஜிம்பாப்வே தொடரின் கடைசி மூன்று போட்டிகளின் போது ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படும் நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு முதல் இரண்டு டி20 போட்டிகளில் நிச்சயமாக ஆட வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் கூட ஆட வாய்ப்பு கிடைக்கலாம்.
அவர் இந்த தொடரில் அவர் அதிக ரன்கள் குவித்தால் இந்திய டி20 அணியில் தனக்கென தனி இடத்தை தக்க வைக்கலாம். தற்போது பிசிசிஐ டி20 போட்டிகளுக்கு தனி அணியை உருவாக்க உள்ளது. அதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நிரந்தர இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.